Wednesday, June 30, 2010

'மார்க்கக் கடமைகளுக்கிடையே ஓற்றுமையும் ஒருமைப்பாடும் இன்றியமையாத தேவையாகும்'



Fatwa on Shia Ithna Asharia and Zaidi Madhabs

ஷீயா இஸ்லாமிய சட்டவியலை பயன்படுத்த அனுமதியுண்டு – எகிப்திய முப்தி அறிவிப்பு
இஸ்லாமிய உம்மாவுக்கு மிகவும் அவசியமான ஷீயா இஸ்லாமிய சட்டவியலை உபயோகிக்க அனுமதி உண்டு என எகிப்திய மாபெரும் முப்தியான அலி கோமா அறிவிப்பு செய்துள்ளார்.
ஷீயா – சுன்னிகளுக்கிடையிலான இணக்கப்பாடு என்பது ஒரு குறிப்பிட்ட இஸ்லாமிய சித்தாந்தப் பிரிவைப் பின்பற்றுபவர் தமது சித்தாந்தத்தைக் கைவிட வேண்டும் என அர்த்தமாகாது என அந்த மூத்த சுன்னி ஆலிம் கூறினார்.
முஸ்லிம்களுக்கிடையிலான ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாடு என்பன பற்றிய முக்கியத்துவத்தை வலியுறுத்திய கலாநிதி அலி கோமா, 'ஒற்றுமையை முன்நோக்கி செல்வது உலகம் முழுவதிலுமுள்ள ஒவ்வொரு இன, சித்தாந்தப் பிரிவின் முஸ்லிம்கள் அனைவர் மீதும் சுமத்தப்பட்டுள்ள கடமையாகும்' எனவும் கூறினார்.
இஸ்லாமிய உலகைப் பொறுத்தவரையில் ஒற்றுமை ஒரு அடிப்படை கோட்பாடாகவும் இன்றியமையாத தாகவும் விளங்குகின்றது. 'மார்க்கக் கடமைகளுக்கிடையே ஓற்றுமையும் ஒருமைப்பாடும் இன்றியமையாத தேவையாகும்' என அவர் மேலும் வலியுறுத்திக் கூறினார்.
தீவிரவாதக் கருத்துகளையும் மதப்பிரிவினைவாதத்தையும் கண்டித்த அவர், அவை இஸ்லாமிய சித்தாந்தப் பிரிவுகளுக்கிடையிலான உரையாடல் மற்றும் இணக்கப்பாட்டு முயற்சிகளை சிதறடித்துவிடும் எனவும் கூறினார்.
எகிப்திய 'தாருள் பத்வா' (மார்க்கத்தீர்ப்பு இல்லம்) அலுவலகத்தில் எகிப்துக்கான ஈரானியத் தூதுவர் செய்யத் முஜ்தபா இமானியை சந்தித்தபோது, அல் அஸ்ஹர் மற்றும் ஏனைய இஸ்லாமிய நிறுவனங்களின் உலமாப் பெருமக்கள், இமாமிய்யா மற்றும் ஸைதி உட்பட அனைத்து இஸ்லாமிய சித்தாந்தப்பிரிவினதும் பிக்ஹ் அறிவுப் பொக்கிஷங்களையும் பயன்படுத்திக்கொள்வது தவறாகாது என்பதை மீண்டும் மீண்டும் வலியுறுத்தி வந்துள்ளனர் என்றும் அவர்களது பெறுமதிமிக்க, வளமான சிந்தனைகள் நிராகரிக்க முடியாதவை எனவும் கலாநிதி கோமா கூறினார்.
முன்னைநாள் அல் அஸ்ஹர் அதிபர் ஷேய்க் மஹ்மூத் ஷல்தூத் அவரகளின் ஷீயா சார்பான மார்க்கத்தீரப்பை எடுத்துக்காட்டிய முப்தி அவர்கள் இஸ்லாமிய உம்மா ஒப்புயர்வற்றது. முஸ்லிம்கள் ஒரே கிப்லாவை நோக்கி தொழும்வரை ஷீயா சுன்னிகளுக்கிடையிலான எவ்வித வேறுபாடும் கிடையாது என்றார்.
'இஸ்லாத்தின் எதிரிகள் முஸ்லிம்களின் ஒற்றுமை, ஒருமைப்பாடு என்பவற்றை வெட்டியெரிய தருணம் பார்த்திருக்கின்றனர். ஷீயா சுன்னி பேதங்களை ஏற்படுத்துவதற்கான காரணிகளை அவர்கள் தேடுகின்றனர்.' எனவே அவர்களது சதித்திட்டங்கள் குறித்து ஒவ்வொருவரும் அவதானமாக இருக்க வேண்டும் எனவும் முப்தி அலி கோமா கூறினார்.

No comments:

Post a Comment