Friday, July 29, 2016

வஹ்ஹாபிஸத்தைப் பூண்டோடு அழிக்கும் ஒரு விவகாரம்

ஆக்கம்: இஸ்ஸத் ஹுஸைன்



'எந்த ஒரு சமூகமும் தன் பண்புகளை மாற்றிக் கொள்ளாத வரை உண்மையில் அல்லாஹ்வும் அச்சமூகத்தின் நிலையை மாற்றுவதில்லை;;;' (திருக் குர்ஆன்; அத்தியாயம் 13 வசனம் 14)

இந்த கட்டுரையின் பிரதான நோக்கம், முஸ்லிம்களும், சர்வதேச சமூகத்தில் இடம்பெற்றிருக்கும் முஸ்லிமல்லாதவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து வஹ்ஹாபிஸத்தையும் அதிலிருந்து தோற்றம் பெற்றுள்ள ஏனைய குழுவினரையும் பூமியின் மேற்பரப்பிலிருந்து பூண்டோடகற்றுவதற்கான நடவடிக்கையை மேற்கொள்வதற்கான ஒரு சுழல் உருவாகி வருகிறது என்பதைச் சுட்டிக் காட்டுவதாகும்.

நான், 'பூண்டோடழித்தல்' என்ற சொல்லைப் பயன் படுத்தியமைக்கான காரணம் வஹ்ஹாபிஸத்தை வேரோடு பிடுங்கி எறியும் ஒரு செயல்முறையை நிறைவேற்றுவதன் மூலம், அது மீண்டும் இந்த மண்ணில் தலை தூக்கக் கூடாது என்ற கருத்தில்தான். கடந்த சில வாரங்களாக நமது பள்ளிவாசல்கள் ஷீஆக்களுக்கெதிரான வெறுப்புப் பிரசாரத்திற்காகத் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதைப் கண்டும் கேட்டும் வந்த பின்பே நான் இந்தக் கருத்தை முன்வைக்கத் துணிந்தேன். இந்த வெறுப்புப் பிரசாரத்தை நியாயப்படுத்துவதற்கான எந்தக் காரணத்தையும் நான் காணவில்லை. நமது நாட்டில், போராக்கள் என்ற பெயரில் சிறியதொரு ஷீஆச் சமூகம் காணப்படுகிறது. இவர்கள், சோனகர்கள், மலாயர்கள், மற்றும் மேமன்கள் அடங்கிய நமது அஹ்லுஸ் ஸுன்னா முஸ்லிம்களுடன் எப்பொழுதும் மிகச் சிறந்த உறவுகளைக் கொண்டிருக்கின்றனர்.

மேலும், முஸ்லிமல்லாத இலங்கையர்களுடனும் அவ்வாறான உறவுகளைப் பேணி வருகின்றனர். அத்துடன், சில நூறு போரா அல்லாத ஷீஆக்களும் இங்கு இருக்கின்றனர், இவர்கள், முக்கியமாக ஈரானின் 1979ம் ஆண்டுப் புரட்சியினால் கவரப்பட்டு ஷீஆயிஸத்தை ஏற்றுக் கொண்டவரகள்;. இவர்கள்தான் வஹ்ஹாபிகளின் வெறுப்புப் பிரசாரத்திற்கான இலக்காக அமைந்திருக்கக் கூடும். ஆயினும், இவர்கள் ஷீஆ நிகழ்ச்சி நிரலொன்றைக் கொண்டு வலுச்சண்டைக்கு போவதற்கோ, அன்றி தமது எண்ணிக்கையை அதிகரித்துக் கொள்வதற்காக ஒழுங்கற்ற முறைமைகளைக் கையாளவோ முற்படவில்லை என்பதை நான் விசாரித்து அறிந்துகொண்டேன்.

எனவே, பல வாரங்களாகத் தொடர்ந்து இடம்பெற்று வருகின்ற, நமது பள்ளிவாசல்களின் புனிதத்துவம் மாசுபடுத்தப்படுகின்ற, இவ்வாறான அவசியமற்ற முற்றிலும் அறிவுக்குப் பொருந்தாத 'ஷீஆக்களுக்கெதிரான வெறுப்புப் பிரசாரத்திற்கு 'விளக்கம்தான் என்ன? இந்தக் கேள்வி மிக முக்கியமானதொன்றாகும்; ஏனெனில், வஹ்ஹாபிஸத்தை ஏன் பூண்டோடு அழிக்கவேண்டும் என்பதற்கான காரணங்களுள் சிலவற்றை இதற்கான பதில்கள் தம்முள் கொண்டிருக்கலாம். விளக்கத்தின் ஒரு பகுதியாக, பிறரை அனுசரிக்காத - மாற்றுக் கருத்துகளைச் சகிக்காத, தமது கருத்துகளைப் பிறர்மீது திணிக்கிற - வஹ்ஹாபிகளின் தான்தோன்றித்தனமான மனோபாவத்தைக் கொள்ளலாம். முஸ்லிமல்லாதவர்கள் மட்டுமல்லாமல், ஸுன்னிகள் மற்றும் ஷீஆக்கள் போன்ற மார்க்கத்தைப் பின்பற்றும் முஸ்லிம்கள், ஏன் சுருக்கமாகச் சொல்லப் போனால், வஹ்ஹாபிக் கோட்பாடுகளை ஏற்றுக் கொள்ளாத எல்லாருமே உண்மையில் முஸ்லிமல்லாதவர்கள்தான் என்றும், எனவே அவர்கள் வாளுக்கிரையாக்கப்பட வேண்டும் என்றும் வஹ்ஹாபிகள் கருதுகின்றனர்.

ஆனால், வஹ்ஹாபிகள் அல்லாத எல்லா முஸ்லிம்களினதும் மிக ஆழமான-அசைக்கமுடியாத நம்பிக்கை அமைப்பிற்கிணங்க, ' இறைவன் ஒருவனே, முஹம்மது அவர்கள் அவனது தூதர்' என்ற ஷஹாதத்தை - நம்பிக்கை ஒப்புதலை மொழிவது ஒரு மனிதனை முஸ்லிமாக்கப் போதுமானதாகும்;. அது கேள்விக்குட்படுத்தக்கூடிய ஒன்றன்று. வஹ்ஹாபிகளின் மூர்க்கமான வெறியுடன் கூடிய சகிப்புத்தன்மையற்றப் போக்கிற்கு அர்த்தமென்னவென்றால், வஹ்ஹாபிகளினால்; ஏனைய முஸ்லிம்களுடன் அமைதியான முறையில் பிறருக்கும் இடமளித்து வாழ முடியாது என்பதுதான். 
அவர்கள், இலங்கையில் ஸுன்னி இஸ்லாத்தைச் சிதறடித்துச் சின்னா பின்னமாக்குவதில் மும்முரமாக ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்;. அவர்கள் இப்போது, ஷீஆயிஸத்தை இல்லாமலாக்க விரும்புகின்றனர்;. மேலும், அடுத்ததாக அவர்கள், இலங்கையில் பாரம்பரியமாக நிலை பெற்றிருக்கும் மரபுவழி சூஃபி அமைப்புகளை இல்லாதொழிக்க விரும்புவார்கள். இதனையொத்த சகிப்புத்தன்மையற்ற ஒரு போக்கை, ஆரம்ப கால இஸ்லாமிய வரலாற்றில் கவாரிஜ்கள் மாத்திரம்தான் வெளிக்காட்டியிருந்தனர். அவர்கள் உடனடியாக ஏனைய முஸ்லிம்;களினால் தடை செய்யப்பட்டனர். (அவ்வாறு) வஹ்ஹாபிகளையும் தடை செய்வதற்கான நேரம் இப்போது வந்து விட்டது!

இன்னும் விளக்கமாகச் சொல்வதென்றால், இங்குள்ள இஸ்லாமிய மார்க்க நிறுவனம் வெளிநாட்டுச் செல்வாக்கின் கீழ், அதாவது, வெளிநாட்டுக் கட்டுப்பாட்டின் கீழ் இருந்து வருகின்றது என்பதுதான மிகச் சரியானதாகும். அண்மைக் காலங்களில் வஹ்ஹாபிஸத்தின் பரம்பல், பெட்ரோ(ல்) டொலர் வலிமையின் வெளிப்பாடுதான் என்பதை அனைவரும்; அறிவர். எனவே, எந்த விதமான அறிவுப்பூர்வமான காரணமும் இல்லாமல் இருக்கும் போது, இலங்கையில் ஷீஆப் பிரச்சினை என்று ஒன்றை உருவாக்குவது என்பது, வெளிநாட்டு நிகழ்ச்சி நிரல் ஒன்றை முன்னெடுத்துச் செல்வதற்கான நடவடிக்கை என்றே பார்க்கப்பட வேண்டும். ஸுன்னி - ஷீஆ தகராறுகள் எனப்படுகின்றவை, மத்திய கிழக்கில் கொதித்து எழுந்து கொண்டிருக்கின்றன. 
இவற்றைப் பற்றி நான் உங்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டும். அவை, உண்மையில் லௌகீக நலன்களுடன் தொடர்புடைய, பெரும்பான்மையினர் மற்றும் சிறுபான்மையினர் இடையிலான தகராறுகள் ஆகும். அவை, இஸ்லாத்தின் இரு வேறுபட்ட பிரிவினர்களுக்கு இடையிலான மதப்பிரிவுத் தகராறுகள் அல்ல. இந்தத் தகராறுகளை மதக் கிளைப்பிரிவுத் தகராறுகளாகச் சித்தரிப்பது, ஷீஆயிஸத்தையும் ஈரானையும் தீயசக்திகளாக - பிசாசுகளாகக் காட்டும் ஒரு திட்டத்தின் பகுதியாகவே காண முடியும்.

இந்தத் திட்டம், ஸியனிஸவாதிகள், நியோகொன் எனப்படும் நவ பழைமைவாதிகள்;, இஸ்லாத்தை அச்சுறுத்தலாகக் காட்டிப் பயமுறுத்துபவர்கள் போன்ற குழுக்களினால், நடக்க வேண்டும் என்று பற்றுறுதியுடன் விரும்பப்படும் ஒன்றான, ஈரான் மீது அணுகுண்டுத் தாக்குதல் நடத்துவதற்கு இட்டுச செல்லும் எனச் சிலர் கருதுகின்றனர். இவையெல்லாம் ஊகத்தை அடிப்படையாகக் கொண்டவையாக இருக்கலாம். திட்டவட்டமான ஒரு விஷயம் என்னவென்றால், இங்குள்ள இஸ்லாமிய மார்க்க நிறுவனம் வெளிநாட்டு நிகழ்ச்சி நிரலொன்றிற்குச் சேவகம் செய்து வருகின்றது என்று குற்றஞ்சாட்டப்படுகின்ற சாத்தியக்கூறுகள் இருக்கின்ற போது, அது பற்றி அந்நிறுவனம தன்னிலையைத் தெளிவுபடுத்த வேண்டும். அது ஷீஆக்களுக்கெதிரான வெறுப்புப் பிரசாரத்திற்குரிய தெளிவான அறிவுப்பூர்வமான காரணங்களைக் காட்டுவதன் மூலம் அதனைச் செய்ய வேண்டும்.

வஹ்ஹாபிஸத்தையும் அதன் படியாக்கங்களையும் பூண்டோடழிக்கும் வகையில் முஸ்லிம்களும், முஸ்லி மல்லாதார்களும் என்ன செயல்முறையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்ற கேள்விக்கு நான் இபபொழுது வருகிறேன். ஏன் இஃது இன்றியமையாதது? ஏற்கனவே நான் மேலே ஒரு காரணத்தைத் தந்துள்ளேன்: தமது கருத்துகளைப் பிறர்மீது திணிக்கிற வஹ்ஹாபிகளின் மூர்க்கமான வெறியுடன் கூடிய சகிப்புத்தன்மையற்றப் போக்குக்கு; அர்த்தம் என்னவென்றால், பிறரை விட மிகுதியான வலிமை தமக்கு கிடைக்கப் பெற்றதும், இஸ்லாத்தின் ஏனைய வடிவங்கள் அனைத்தையும் உடனடியாக அழித்தொழிக்க அவர்கள் விரும்புவர் என்பதுதான்.

இலங்கையில் நம் கண்ணுக்கு முன்னால் அத்தகைய ஒரு செயற்பாங்கு நடந்து கொண்டிருப்பதை நாம் காணலாம். மற்றொரு காரணம், வஹ்ஹாபிஸம் தீமையானது என்பதாகும். நஜ்திலிருந்து ஷைத்தானின் கொம்பு வெளிப்படும் என வியக்கத்தக்க வகையில் நடக்க முன் இறை தூதர்கள் தீர்க்கதரிசனமாகக் கூறிய ஹதீஸை நான், ஆபத்து பற்றிய எச்சரிக்கையாக எடுத்துக் கொள்கிறேன்;. இந்த நஜ்திலிருந்துதான் முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப் தோன்றினார். இஸ்லாமிய இறைமையியல் கலைச் சொல் ரீதியில், வஹ்ஹாபிஸம் என்பது இப்லீஸின் வேலையாகும். லௌகீக கலைச் சொல் ரீதியில், அது தீமையானது என்பதன் மூலம், தீங்கு விளைவிப்பது மற்றும் அழித்தொழிப்பதன் வாயிலாக குதூகலம் அடைந்து கொள்வதையே நான் அர்த்தப்படுத்துகிறேன். குறிப்பாக சினிமா மற்றும் புனைக்கதைகள் போன்ற அழகு கலைப் படைப்புகளிலிருந்து பல உதாரணங்களை எடுத்துக் காட்டி இந்த சொற்பொருள் விளக்கத்தை மெய்ப்பிக்க என்னால் முடியும். ஆயினும், இங்கு அது அவசியமில்லை.

நான் அந்த சொல்லின் வரையிலக்கணத்தை, வஹ்ஹாபிஸம் தனது நடைமுறைச் செயல்பாட்டில் என்ன கருத்து கொண்டிருக்கிறது எனக் காட்டுவதின் மூலம் மெய்ப்பிக்கின்றேன். முந்தைய கட்டுரையொன்றில் நான் வஹ்ஹாபிஸத்தின் உள்மையப்பகுதியே முட்டாள்தனத்தை மூலதனமாகக் கொண்டிருக்கிறது என விவாதித்ததுள்ளேன். புனிதர்கள், ஞானிகள் உட்பட மேன்மை வாய்ந்த மனிதர்களுக்கு ஒதுக்கி வைக்கப்பட்ட மரியாதைச் செயல்களுக்கும், தெய்வத்திற்கு என பிரத்தியேகமாக ஒதுக்கி வைக்கப்பட்ட வழிபாட்டுச் செயல்களுக்கும் இடையில் வேறுபடுத்திப் பார்க்கும் விஷயத்தில் அவர்களுக்கு ஏற்பட்டிருக்கும் குழப்பம், இந்த முட்டாள்தனத்தை நிரூபிக்கின்றது. மனிதப் புனிதர்களை மதித்துப் போற்றும்; செயல்களில் ஈடுபட்டிருக்கும் ஒரு நூறு கோடிக்கும் அதிகமான முஸ்லிம்களுள் ஒருவரேனும், பலதெய்வ வணக்கக் குற்றச்சாட்டுக்கு இலக்காக முடியாது என்பது சர்ச்சைக்கு அப்பாற்பட்ட ஒன்றாகும்.

இதனால்தான், முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப் கூட, அவர்களுள் எவரும் நிரந்தர நரக நெருப்புக்கு உள்ளாக மாட்டார் எனக் கூறியிருந்தார். மனிதப் புனிதர்களின் வழிபாடு என்று அவர் எதனைக் கருதினாரோ, அதில் அவருக்குப் பின் தொடர்ந்து ஈடுபட்டுக் கொண்டிருப்பவர்களுக்கு மட்டும்தான் அந்த விதிப்பலன் கிடைக்கும். மரபுவழி இஸ்லாத்தில் 1200 ஆண்டுகள் அனுமதிக்கப்பட்டிருந்த ஒரு நடைமுறை, முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாபுக்குப் பிறகு எவ்வாறு நிரந்தர நரக நெருப்புக்கு உரியதாக ஆக முடியும்? இது, வஹ்ஹாபிஸத்தின் உள்மையப்பகுதியில் அதி முட்டாள்தனம்தான் காணப்படுகிறது என்பதை சந்தேகத்துக்கு இடமின்றி; தெளிவாக நிறுவுகின்றது. இருந்த போதிலும்;, மனிதப் புனிதர்களின் வழிபாடுதான் நடக்கின்றது என வஹ்ஹாபிகள் உளமார நம்புகின்ற போது, அவர்கள் கல்லறைகளையும் பிற நினைவுச் சின்னங்களையும் நிர்;மூலம் ஆக்குவதற்கு உரிமை பெற்றவர்களா என்பது விவாதிக்கப்பட வேண்டியதொன்றாகும். ஆனால், பல நூற்றாண்டுகளுக்கு மேலாக பெருமிதத்துடன் பாதுகாத்து வரப்படும் கலாசார நினைவுப் பொருட்கள் பற்றி என்ன கூற முடியும்? அவற்றுக்கு பலதெய்வக் கோட்பாட்டுடன் பெருந் தொலை தூரச் சம்பந்தமும் கூட கிடையாது! வஹ்ஹாபிஸத்தின் உள்மையப்பகுதியில் காணப்படும் எல்லாவற்;றையும் அழித்தொழிக்கும் தீங்கிற்கு இது சான்று பகர்கின்றது என நான் நினைக்கிறேன்.

தீங்கு விளைவிப்பது மற்றும் அழித்தொழிப்பதன் வாயிலாக மகிழ்ச்சி அடைந்து கொள்ளும் தீமையான செயலூக்கம், வஹ்ஹாபிஸத்தின் உள்மையப்பகுதியில் காணப்படுவதை மிகவும் நிதர்சனமாகக் காட்டும் அத்தாட்சிகளாக, ஐ.எஸ்.இயக்கம் நிகழ்த்தி வரும் திகில் கொண்ட பயங்கரச் செயல்களைக் குறிப்பிடலாம்: பலவந்த விவாகம், பாலியல் அடிமைகளாகப் பெண்கள் விற்கப்படுவது, திருமணமின்றி பெண்களை ஆசைநாயகிகளாக வைத்திருப்பது, ஒட்டுமொத்தமான சிரச்சேதங்கள், ஆராய்ந்து அறியாது செய்யப்படுகின்ற படுகொலைகள், கலாசார நினைவுப் பொருட்களும் கலாசாரத் தலங்களும் முற்றாக நாசப்படுத்தப்படல், போன்றவை இவற்றுள் அடங்கும்.

இந்த விஷயத்தில் இஸ்லாமிய உலகம் மனதுக்கு சங்கடம் தரும் சில வெறுப்புடன்கூடிய உண்மைகளைச் சந்திக்க வேண்டும். சவூதி அரேபியா உட்பட இஸ்லாமிய உலகம் முழுவதும், ஐ.எஸ். இயக்கத்தின் செயல்களை இஸ்லாத்திற்கு மாறானவை என மிகப் பட்டவர்த்தனமாக கண்டித்திருக்கின்றது. அப்படியென்றால், ஐ.எஸ். இயக்கத்தின் ஆள் திரட்டும் நடவடிக்கைகள் பெருமளவில் இஸ்லாமிய உலகின் பல பகுதிகளில் வெற்றிகரமாக நடந்து வருவதுடன், அந்த அணியில் சேரும் ஆட்கள் வஹ்ஹாபிஸக் கொள்கையைப் பின்பற்றுபவர்களாக இருக்கும் அருவருப்பான உண்மையைப் பற்றி என்ன சொல்வது? அது மட்டுமல்லாமல், ஐ.எஸ்.இயக்கம் சவூதி அரேபியாவைப் போலல்லாமல், தான் வஹ்ஹாபிஸத்தின் கோட்பாடுகளை மிகக் கண்டிப்பாக நடைமுறைப்படுத்தி வருவதாக பிரகடனஞ் செய்கிறது. அதனுடைய கல்வி அமைப்பு முறை முழுக்க வஹ்ஹாபிஸக் கொள்கையைச் சார்ந்தது என உரிமை பாராட்டுகின்றது. அதற்கு ஆதாரமாக, சவூதி அரேபியாவில் பயன்படுத்தப்படும் அதே பாட நூல்கள், ஐ.எஸ். இயக்கம் நடத்தும் பாடசாலைகளில் உபயோகத்தில் உள்ளதை அது எடுத்துக் காட்டுகின்றது. 

இஸ்லாமிய உலகம் எதிர்நோக்குகின்ற கேள்வி, வஹ்ஹாபிஸத்திற்கும் ஐ.எஸ். இயக்கத்திற்கும் இடையில் ஒட்டுறவு உண்டா இல்லையா என்பதன்று. மாறாக, கேள்வி என்னவென்றால், சவூதி அரேபியா அல்லாமல் ஐ.எஸ். இயக்கம்தானா வஹ்ஹாபிஸத்தின் நடைமுறைகளை அதன் முழுமையான ஆதாரப்பூர்வமான வடிவத்தில் அமுல்படுத்தி வருகிறது? பாலியல் அடிமைத்துவம் போன்ற ஐ.எஸ். இயக்கத்தைத் தனிப்பட அடையாளப்படுத்திக் காட்டும் நடைமுறைகளுக்கு முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாபின் சொந்த எழுத்தாக்கங்களில் அனுமதி வழங்கப்பட்டிருக்கிறதா இல்லையா என்பதை எடுத்துக் காட்டுவதனால் மாத்திரம்தான் இந்த கேள்விக்கான பதிலைப் பெற்றுக் கொள்ள முடியும். நிலைமை அவ்வாறு இருக்குமானால், வஹ்ஹாபிஸத்தை பூமித் தளத்திலிருந்து முற்றும் முழுதாக ஆணி வேரோடு - வேரடி மண்ணோடு பிடுங்கி அகற்றுவதை நோக்கி நகர்வதைத் தவிர இஸ்லாமிய உலகிற்கு வேறு எந்த மாற்று வழியும் கிடையாது, இன்று மட்டுமல்லாமல் என்றுமே அது அவசியமாகின்றது. சவூதி அரேபியா வஹ்ஹாபிஸத்தைக் கைவிட்டுவிட வற்புறுத்தப்பட வேண்டும். இந்த விஷயத்தில் மேற்கிற்கும் இஸ்லாமிய உலகிற்கும் இடையில் அக்கறையும் கவனமும் ஒன்றையொன்று சந்திக்கின்றன: மேற்கிற்கு ஐ.எஸ். இயக்கத்தின் பயங்கரவாத அச்சுறுத்தலுக்கு முடிவு கட்டும் அவசியமிருக்கின்றது, இஸ்லாமிய உலகிற்கு இஸ்லாத்தை வஹ்ஹாபிஸத்திலிருந்து பாதுகாக்கும் தேவையிருக்கின்றது. 

முடிவாக நான் ஒன்றை வலியுறுத்திக் கூற விரும்புகின்றேன்: வஹ்ஹாபிஸத்திற்கு எதிரான எனது நிலைப்பாட்டின் பின்னணியில் மரபுவழி இஸ்லாத்தின் பலமும் மாட்சிமையும் காணப்படுகிறது. அது அதன் முழுமையான வடிவத்தில், ஏறத்தாழ கி.பி.1200 வாக்கில் நிர்மாணிக்கப்பட்டது. மேலும், அது அன்றிலிருந்து இஸ்லாமிய உலகின் மிகப் பெரும் பகுதியைத் தனது கட்டுப்பாட்டிற்குள் வைத்திருந்தது. வஹ்ஹாபிஸத்தை ஆதரிப்பவர்களின் பினனணி;யில் பெட்ரோ(ல்) டொலரின் வலிமை முக்கியமாகக் காணப்படுகின்றது. முடிவில் ஏற்படும் விளைவு நிச்சயமானது.


இஸ்ஸத் ஹுஸைன்


No comments:

Post a Comment